காசோலைகளை மாற்ற முடியாமல் தவிக்கும் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

பெண் கல்விக்கான உதவித் தொகை கோடிட்ட காசோலைகளாக வழங்கப்பட்டதால், அவற்றை மாற்ற முடியாமல் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிரமப்படுகின்றனர்.
காசோலைகளை மாற்ற முடியாமல் தவிக்கும் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

பெண் கல்விக்கான உதவித் தொகை கோடிட்ட காசோலைகளாக வழங்கப்பட்டதால், அவற்றை மாற்ற முடியாமல் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிரமப்படுகின்றனர்.
 பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் கிராமப் புறங்களில் பயிலும் மிக பிற்பட்ட மாணவிகளுக்கு ஆண்டுதோறும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை பிற்பட்டோர் நலத்துறை மூலம் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 3 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. ஐந்தாம் வகுப்பு வரை 500 ரூபாயும், 6 முதல் 8ஆம் வகுப்பு வரை ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. இதேபோல கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களில் பயிலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவிகளுக்கும் கல்வி ஊக்க உதவித் தொகை வழங்கப்படுகிறது.
5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு ரூ.500, 6-ம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு ரூ.1000, 7 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு ரூ.1500 வீதம் வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு வரை உதவித் தொகைக்கான காசோலை கோடிடப்படாமல் (கிராஸ்) தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.  அந்த காசோலையில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலரிடம் மேலொப்பம் பெறப்பட்டு, வங்கியில் மாற்றப்பட்டது.  காசோலை பணமாக மாற்றப்பட்டு மாணவர்களுடைய வங்கி அல்லது தபால் நிலைய கணக்குகளில் செலுத்தப்பட்டு வருகிறது.
நடப்பு ஆண்டில்  தலைமை ஆசிரியர் கணக்கில் செலுத்தி பணமாக்கும் வகையில் காசோலையில் கோடிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர் என்ற பெயரில் எந்தப் பள்ளியிலும் சேமிப்புக் கணக்கு கிடையாது.
 மேலும் தலைமை ஆசிரியர்கள் கிராம கல்விக்குழு அல்லது பள்ளி மேலாண்மைக் குழு கணக்கில் தான் செலுத்தி பணத்தை எடுக்க முடியும்.  இக்கணக்குகள் இணை கணக்குகள் ஆகும்.  மேலும் இக்கணக்குகள் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் துவங்கப்பட்டுள்ள கணக்குகள். இதற்கு தனியாக தணிக்கை நடத்தப்படுகிறது.  
 மாணவிகளுக்கு வழங்கப்படும் கல்வி ஊக்கத் தொகை வழங்கப்படும் கணக்கு தலைப்பு வேறு, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள கிராம கல்விக்குழு அல்லது பள்ளி மேலாண்மைக் குழு கணக்கு தலைப்பு வேறாகும். இவ்வாறான நிலையில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் உள்ள கணக்கில் மாணவிகளுக்கான கல்வி ஊக்கத் தொகைக்கான காசோலையைச் செலுத்தி பணமாக்குவதால் தணிக்கையின்போது தலைமை ஆசிரியர்கள் பல்வேறு சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும்.
  நடப்பாண்டில் கோடிட்ட காசோலையாக வழங்கப்பட்டுள்ளதால் வங்கிகளுக்குச் சென்று காசோலையை மாற்றுவதில்  தலைமை ஆசிரியர்கள் பல சிக்கலை சந்திக்க வேண்டியுள்ளது.  தலைமை ஆசிரியர்கள் பணமாக்கி பிறகு மாணவர்களின் வங்கி அல்லது தபால் நிலைய கணக்குகளில் தான் மீண்டும் செலுத்த வேண்டியுள்ளது.  
அதனால் பழைய முறைப்படி கோடிடப்படாமல் காசோலையை வழங்க வேண்டும். அல்லது மாணவர்களின் வங்கி அல்லது தபால் நிலைய கணக்குகளில் ஈசிஎஸ் முறையில் நேரடியாக கல்வி ஊக்கத் தொகையை வரவு வைக்க வேண்டுமென தலைமை ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com