வடமேற்கு தில்லியில் "சீல்' வைக்கப்பட்ட சட்டவிரோத தொழிற்சாலைகள் குறித்த விவரங்களை தெரிவிக்காததற்காக தில்லி அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) கண்டனம் தெரிவித்துள்ளது.
மேற்கு தில்லியின் ரோகிணியில் உள்ள பிரஹலாத்பூர் பங்கர் பகுதியில் சட்டவிரோத தொழிற்சாலைகள் செயல்பட்டு வருவதாகவும், தில்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் இல்லாமல் செயல்படும் இந்த தொழிற்சாலைகள் மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் குற்றம்சாட்டி, அந்த பகுதியைச் சேர்ந்த கிருஷண் குமார் என்பவர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு மீது ஏற்கெனவே நடைபெற்ற விசாரணையின் போது, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தில்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், வடக்கு தில்லி மாநகராட்சி ஆகியவை, பிரஹலாத்பூர் பங்கர் பகுதியில் கூட்டாக ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை அளிக்க உத்தரவிட்டிருந்தது. மேலும், சட்டவிரோதமாக செயல்பட்டதற்காக இதுவரை சீல் வைக்கப்பட்ட தொழிற்சாலைகள் குறித்த விவரங்களை அளிக்கும்படி அந்த பகுதி கோட்டாட்சியருக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், நீதிபதி ஜாவத் ரஹீம் தலைமையிலான அமர்வு முன் இந்த விவகாரம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோட்டாட்சியர் தரப்பில் எந்த விவரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை. இதையடுத்து, நீதிபதிகள் கூறுகையில், "நாங்கள் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தும், சீல் வைக்கப்பட்ட தொழிற்சாலைகள் குறித்த விவரங்களை கோட்டாட்சியர் சமர்ப்பிக்கவில்லை. அதற்குரிய காரணமும் தெரிவிக்கப்படவில்லை. நாங்கள் ஏற்கெனவே கோரிய விவரங்களை அளிப்பதுடன், தங்களது தாமதத்துக்கான காரணத்தையும் கோட்டாட்சியர் விளக்க வேண்டும்' என்று கண்டிப்புடன் தெரிவித்தனர். அத்துடன், அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.