ஊழியர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் (ஈபிஎஃப்) சேர்ந்துள்ள ஊழியர், தாம் வீடு வாங்குவதற்காக அந்த நிதியில் பணம் பெறும் வகையில் விதியில் புதிய திருத்தம் செய்து அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்.
இது தொடர்பாக திருவள்ளூர் மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினரும், நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவருமான டாக்டர் பி.வேணுகோபால் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய இணையமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா திங்கள்கிழமை அளித்துள்ள பதிலில் தெரிவித்திருப்பதாவது:
ஊழியர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் (ஈபிஎஃப்) சேர்ந்துள்ள நிதியில் இருந்து வீடு வாங்குவதற்காக, ஊழியர் பணம் பெறுவது தொடர்பாக மத்திய அரசு நிகழாண்டின் ஏப்ரல் 12-ஆம் தேதி ஓர் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், வீடு கட்ட அல்லது வீடு வாங்க வருங்கால வைப்பு நிதியில் இருந்து ஊழியர் பணம் எடுப்பதற்காக "ஈபிஎஃப் திட்டம் 1952'-இல் புதிதாக ஒரு பாரா சேர்க்கப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதியில் இருந்து ஊழியர் மற்றும் வேலை தரும் நிறுவனத்தின் பங்களிப்பு நிதி மற்றும் வட்டியில் இருந்து 90 சதவீதத்திற்கு அதிகமாக பணம் எடுக்க முடியாது எனவும் அந்த விதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார்.