ஆதார் அட்டைப் பதிவில் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்று மக்களவையில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.
இது தொடர்பாக நீலகிரி மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன், "தேவையான முகவரி, அடையாளச் சான்று இல்லாமல் ஆதார் அட்டை கள் அளிப்பது தொடர்பாக அதிக அளவில் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா?' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் மக்களவையில் புதன்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தேவையான முகவரி, அடையாளச் சான்று இல்லாமல் ஆதார் அட்டை கள் அளிப்பது தொடர்பாக புகார்கள் ஏதும் இல்லை. ஆதார் பதவில் உரிய வழிகாட்டு நெறிமுறைகளும், நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்த விஷயங்கள், "ஆதார் பதிவு மற்றும் மேம்படுத்துதல் ஒழுங்குமுறைகள் 2016'-இல் உள்ள பிரிவு இரண்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆதார் சட்டத்தின் உரிய ஷரத்துகளின்படி சரி செய்யும் நடவடிக்கைகளும் தேவைப்படும் போது எடுக்கப்பட்டு வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.