வடக்கு தில்லி மாநகராட்சி பகுதி உணவு விடுதிகளில் உள்ள கழிப்பறைகளை பெண்கள், குழந்தைகள் இலவசமாக பயன்படுத்தலாம் என்று வடக்கு தில்லி மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வடக்கு தில்லி மாநகராட்சி மேயர் பிரீத்தி அகர்வால் செய்தியாளர்களிடம் கூறுகையில், "வடக்கு தில்லி மாநகராட்சி பகுதியில் மொத்தம் 270 ஹோட்டல்களும், உணவு விடுதிகளும் உள்ளன. அவற்றில் உள்ள கழிப்பறைகளை பெண்கள், குழந்தைகள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதுதொடர்பாக ஹோட்டல் உரிமையாளர்கள், சங்கத்தினரிடம் கலந்து ஆலோசனை நடத்திய பின்னர்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் மூலம் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள வடக்கு தில்லி மாநகராட்சி பகுதிகளுக்கு செல்லும் பெண்கள், குழந்தைகள் பயன் அடைவார்கள்.
கரோல் பாக் பகுதியில் 47 உணவு விடுதிகளும், நரேலா பகுதியில் 12 உணவு விடுதிகளும், ரோஹிணி பகுதியில் 72 உணவு விடுதிகளும், சர்தார் பஹார்ஜஞ்ச் பகுதியில் 34 உணவு விடுதிகளும், சிட்டி சோன் பகுதியில் 14 உணவு விடுதிகளும் இதில் அடங்கும்.
இந்த திட்டம் குறித்த ஸ்டிக்கர்கள் சம்பந்தப்பட்ட ஹோட்டல்கள் வெளியே அடையாளத்துக்காக ஒட்டி வைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
தெற்கு தில்லி மாநகராட்சி இத்திட்டத்தை மே 1ஆம் தேதி முதல் அமல்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.