தில்லியில் காதலனுடன் திட்டமிட்டு சகோதரர் வீட்டில் கொள்ளையடித்த சகோதரி கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வடமேற்கு தில்லியிலுள்ள ஷாலிமர் பாக்கில் வசித்து வருபவர் பிரிஜேஷ். இவரது சகோதரி ஆர்த்தி. பிரிஜேஷுக்கு மனைவியும் 5 வயதில் மகனும் உள்ளனர்.
இந்நிலையில், முகமது கான் என்பவரை ஆர்த்தி காதலித்து வந்ததாக தெரிகிறது. தனது காதலை வீட்டில் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதால், முகமது கானுடன் வீட்டை விட்டு வெளியேற ஆர்த்தி முடிவு செய்தார். மேலும், காதலனுடன் வசதியாக வாழ்வதற்காக சொந்த சகோதரர் வீட்டிலேயே கொள்ளையடிக்கவும் ஆர்த்தி திட்டமிட்டார்.
அதன்படி, முகமது கான் உள்பட 3 பேர், பிரிஜேஷின் வீட்டுக்குள் கடந்த 15-ஆம் தேதி இரவு நுழைந்தனர். பிரிஜேஷையும், அவரது மனைவி, மகனையும் தாக்கிவிட்டு, ரூ.1 லட்சம் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்தனர்.
இதனிடையே, தன் மீது சந்தேகம் வந்துவிடக் கூடாது என்பதற்காக கொள்ளையர்களை தடுப்பது போல ஆர்த்தி நடித்துள்ளார். பின்னர், கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிவிட்டனர்.
இச்சம்பவம் குறித்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், முகமது கானும் அவரது கூட்டாளிகள் இருவரும் சிக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கொள்ளைச் சம்பவத்தில் ஆர்த்தியின் சதியும் அம்பலமானது. இதையடுத்து, அவரும் கைது செய்யப்பட்டார் என்றார் அந்த அதிகாரி.