துன்புறுத்திய கணவனை தூக்கிலிட்டு கொன்ற மனைவி!

வடகிழக்கு தில்லியின் சீலம்பூர் பகுதியில் தன்னை தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்த கணவனை தூக்கிலிட்டு கொன்றதாக 25 வயது மனைவி கைது செய்யப்பட்டார்.

வடகிழக்கு தில்லியின் சீலம்பூர் பகுதியில் தன்னை தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்த கணவனை தூக்கிலிட்டு கொன்றதாக 25 வயது மனைவி கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து வடகிழக்கு காவல்துறை துணை ஆணையர் அஜித் குமார் கூறியதாவது:
கடந்த 16-ஆம் தேதி சலீம் என்ற நபர் சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். இதுதொடர்பாக தகவலறிந்து அந்த மருத்துவமனைக்கு சென்றபோது சலீம் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக சலீமின் மனைவியிடம் விசாரித்தபோது, குல்பஹார் மற்றும் ஆசிஃப் ஆகிய இருவரும் தனது கணவனை கொன்றுவிட்டதாக அவர் போலீஸாரிடம் கூறினார். இதையடுத்து, அவர்கள் இருவரையும் அழைத்து விசாரித்தபோது அவர்களுக்கு இதில் தொடர்பு இல்லை எனத் தெரியவந்தது.
பின்னர் சலீமின் மனைவியிடம் போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது சலீமை தாம் தான் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். அவர் கூறியதன் படி, சலீமுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது.
அத்துடன், அவர் தனது மனைவியை அடிக்கடி அடித்துத் துன்புறுத்தியுள்ளார். இதனால் அவரிடமிருந்து தப்பிக்க சலீமைக் கொலை செய்ய அவரது மனைவி முடிவு செய்துள்ளார்.
அதன்படி கடந்த 15-ஆம் தேதி இரவில் சலீமின் உணவில் மயக்க மருந்தைக் கலந்து கொடுத்துள்ளார். மயங்கிய சலீமை தனது துப்பட்டாவைக் கொண்டு தூக்கிலிட்டுள்ளார். அவர் சுயநினைவின்றிப் போனதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அவர் சலீமை கொலை செய்யப் பயன்படுத்திய அவரது துப்பட்டா பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவரும் கைது செய்யப்பட்டார் என்று போலீஸார் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com