வாடகைச் சட்டத்தில் திருத்தம் கோரி வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டம்

தலைநகரில் 'பகடி' முறையில் கடைகளை வாடகைக்கு எடுத்து தொழில் செய்து வரும் வர்த்தகர்கள், தில்லி வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தில் திருத்தம் கோரி சாந்தினி செளக்கில் வெள்ளிக்கிழமை

தலைநகரில் 'பகடி' முறையில் கடைகளை வாடகைக்கு எடுத்து தொழில் செய்து வரும் வர்த்தகர்கள், தில்லி வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தில் திருத்தம் கோரி சாந்தினி செளக்கில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய வாடகைச் சட்டத்தின் படி தாங்கள் கடைகளில் இருந்து அகற்றப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து, சாந்தினி செளக் வர்த்தகர்கள் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சாந்தினி செளக் பகுதியில் இருக்கும் 10,000-க்கும் அதிகமான பகடி முறையிலான வாடகைக் கடைகளில் தொழில் செய்து வரும் வர்த்தகர்கள், அப்பகுதியில் இருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் நிலக் கொள்ளையர்கள் மூலம் அகற்றப்படுகின்றனர். இதற்காக அவர்கள் மீது போலி வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
இதன் காரணமாக வர்த்தகம் தொடர்பான சுமார் 50 லட்சம் பேரின் வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. ஏற்கெனவே சுமார் 50,000 பேர் வேலையின்றி இருக்கின்றனர்.
பகடி வாடகை முறையில் கடை வைத்திருக்கும் வர்த்தகர்களை அகற்றும் முயற்சியால், சாந்தினி செளக், சதர் பஜார், கரோல் பாக் ஆகிய பகுதிகளில் உள்ள வர்த்தகர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகிறது.
தில்லி வாடகைச் சட்டத்தை பயன்படுத்தி சமீபத்தில் சுமார் 5 லட்சம் கடைகள் காலி செய்யுமாறு கோரப்பட்டன.
அவற்றில் பெரும்பாலான கடைகள் 20 சதுர அடிக்கும் குறைவான அளவில் சிறிய அளவிலான வர்த்தகர்களால் இயக்கப்பட்டு வருபவையாகும். எனவே, தில்லி வாடகைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர் ராகேஷ் தகுரல் கூறுகையில், 'பகடி முறையில் கடைகளை நடத்தி வரும் வர்த்தகர்கள், சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளருக்கு அதற்குரிய தொகையை முழுமையான அளவில் ஏற்கெனவே செலுத்தியுள்ளனர். ஆனால், தற்போதைய சட்டத்தின் படி இப்போதும் அவர்கள் வாடகைதாரர்களாகவே கருதப்படுகின்றனர்' என்றார்.
பகடி முறை: பகடி முறையானது, சுதந்திரத்துக்கு முன்பு பிரிட்டிஷ் அரசுக்கு கூடுதல் வரி செலுத்தப்படுவதை தவிர்க்க அறிமுகம் செய்யப்பட்ட ஒன்றாகும்.
இதன்படி, ஒரு இடத்தை வாடகைக்கு பெற விரும்பும் நபர் அதற்குரிய முழு தொகையை நில உரிமையாளருக்கு வழங்கிடுவார். பதிலாக, அவருக்கு அதற்கு ஒரு துண்டுச் சீட்டு ஒப்புதலாக அளிக்கப்படும்.
வாய்மொழி உறுதியின்பேரில் சம்பந்தப்பட்ட இடம் உரிமை மாற்றப்பட்டதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com