தலைநகர் தில்லி மற்றும் தேசியத் தலைநகர் வலயப் பகுதிகளில் நச்சுப் புகை கலந்த பனிமூட்டம் செவ்வாய்க்கிழமை காலையிலும் தொடர்ந்தது. இதனால், காண்பு திறன் குறைந்ததால் சுமார் 10 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே துறை அதிகாரி தெரிவித்தார்.
இது தொடர்பாக ரயில்வே துறையின் மூத்த அதிகாரி கூறியதாவது: தில்லி மற்றும் தேசியத் தலைநகர் வலயப் பகுதிகளில் நச்சுப் புகை கலந்த பனிமூட்டம் தொடர்கிறது.
இதையடுத்து காண்பு திறன் வெகுவாகக் குறைந்ததால் ரயில்கள் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சில் இடங்களில் மொத்தம் 10 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. 73 ரயில்கள் தாமதமாக வந்தன. 34 ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டன என்றார் அவர்.
தில்லியில் செவ்வாய்க்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 14.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. காலை 8.30 மணி அளவில் காற்றின் ஈரப்பதம் 84 சதவீதமாக இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், புதன்கிழமை (நவம்பர் 15) லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால், பனிமூட்டம் அதிகரித்தாலும், நச்சுப் புகை குறைய வாய்ப்பு ஏற்படும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
தில்லி, தேசியத் தலைநகர் வலயப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக நச்சுப் புகை கலந்த பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால், கட்டுமான நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.