தேசியத் தலைநகர் வலயம், கிரேட்டர் நொய்டாவில் பிரோதி கிராமத்தில் பள்ளியிலிருந்து தந்தையுடன் வீடு திரும்பிய மாணவி கடத்தப்பட்டதாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து காவல் துறை அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
கிரேட்டர் நொய்டா மாவட்டம், கிரோதி கிராமத்தைச் சேர்ந்தவர் ராகேஷ். இவரது 15 வயது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.
இந்நிலையில், பள்ளிக்குச் சென்ற தனது மகளை அழைத்துக் கொண்டு ராகேஷ் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, பிரோதி கிராமத்துக்கு சென்று கொண்டிருந்த போது, மூவர் வந்த கார் ஒன்று அவர்களை வழிமறித்து நின்றது. அதிலிருந்த மூவரும் கைத்துப்பாக்கியை ராகேஷ் மீது வைத்து, அவரது மகளை காரில் கடத்திச் சென்றனர்.
இது குறித்து அவர் சுராஜ்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.