நொய்டா அருகே யாகூப்பூரில் வசித்து வந்த பெண், வரதட்சிணைக் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் அப்பெண்ணின் கணவர், மாமனார் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து காவல் துறை அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியதாவது: முதலில் அப்பெண் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஆனால், அப்பெண்ணின் சகோதரர், வரதட்சிணைக் கொடுமை காரணமாக அவர் இறந்துள்ளதாக போலீஸில் புகார் அளித்துள்ளார். அப்புகாரில், "எனது சகோதரியின் கணவர் வீட்டினர் கூடுதலாக வரதட்சிணை கேட்டு வந்தனர். ஆனால், அவர்களது கோரிக்கையை எங்களால் நிறைவேற்ற முடியவில்லை. இதையடுத்து இந்த விபரீத முடிவை எனது சகோதரி எடுத்துள்ளார்' என்று தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, அப்பெண்ணின் கணவர், மாமனார் மீது வரதட்சிணைக் கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.