திருட முயன்றவர் மீது கொடூரத் தாக்குதல் சம்பவம்: மேலும் நால்வர் கைது

தெற்கு தில்லியில் வீடு புகுந்து திருட முயன்றதாக கூறி, நைஜீரியர் என கருதப்படும் ஒருவரை, கட்டி வைத்து தாக்கிய சம்பவத்தில், மேலும் 4 பேர் கைது

தெற்கு தில்லியில் வீடு புகுந்து திருட முயன்றதாக கூறி, நைஜீரியர் என கருதப்படும் ஒருவரை, கட்டி வைத்து தாக்கிய சம்பவத்தில், மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த மாதம் 24-ஆம் தேதி நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பான விடியோ,  திங்கள்கிழமை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அஹ்மத் என்ற அந்த நபர், தெற்கு தில்லியின் மாள்வியா நகர் பகுதியிலுள்ள கிருஷ்ண குமார் (54) என்பவரது வீட்டுக்குள் புகுந்து திருட முயன்றதாகவும், பின்னர் அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து காயமடைந்ததாகவும் கடந்த 24-ஆம் தேதியன்று எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, கிருஷ்ண குமார் அளித்த புகாரின்பேரில் அஹ்மத் கைது செய்யப்பட்டார். அவரது உடலில் காயங்கள் இருந்தன.
விசாரணையின்போது, தான் நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர் என்றும் அவர் கூறினார். எனினும், அதற்கான ஆவணங்கள் எதையும் அவர் சமர்ப்பிக்கவில்லை. தனது உடலில் உள்ள காயங்கள், அந்த வீட்டில் இருந்து தப்ப முயன்றபோது ஏற்பட்டவை என்று அவர் வாக்குமூலம் அளித்திருந்தார்.
இந்நிலையில், அஹ்மதை கட்டிவைத்து, ஒரு கும்பல் தாக்குவது போன்ற விடியோ திங்கள்கிழமை வெளியானது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விவகாரத்தில், புகார்தாரரான கிருஷ்ண குமார் கைது செய்யப்பட்டார். மேலும், விடியோ காட்சிகளின் அடிப்படையில் சஞ்சய், கமல் காந்த், மஹாவீர், முகேஷ் ஆகிய 4 பேர் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர் என்றார் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com