தில்லியில் உள்ள 6 மாவட்ட நீதிமன்றங்களின் வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை ஒரு நாள் அடையாள நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக வழக்குரைஞரும், தில்லி வழக்குரைஞர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலர் ஜெய்வீர் சிங் சௌஹான் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
தில்லி நீதிமன்றங்களில் உள்ள சில நீதிபதிகள் வழக்குரைஞர்களை தங்கள் உதவியாளர்களைப்போல் வழிநடத்துகின்றனர். சில நீதிபதிகளின் தவறான வழிமுறையால் ஊழல் நடைபெறுகிறது. அவர்களின் பெயர்களை தில்லி உயர் நீதிமன்றத்தில் அளித்த பின்பும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீஸ் ஹசாரி நீதிமன்றத்தின் வழக்குரைஞர்கள் புதன்கிழமை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி பாட்டியாலா ஹவுஸ், ரோஹிணி, சாகேத், துவாரகா, கர்கர்டூமா, தீஸ் ஹசாரி ஆகிய 6 மாவட்ட நீதிமன்றங்களின் வழக்குரைஞர்களும் வெள்ளிக்கிழமை ஒரு நாள் அடையாள நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இதனால் தில்லியில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களின் பணிகள் ஒரு நாள் பாதிக்கப்படும் என்றார்.