தலைநகர் தில்லியின் துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலின் அதிகாரம் குறித்து துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்த கருத்து ஏற்றுக் கொள்ள முடியாதது என்று சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா தெரிவித்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், "தில்லி சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் புதன்கிழமை நிறைவுற்றது. இதிலிருந்து ஆம் ஆத்மி கட்சிக்கு ஜனநாயகத்தின் மீதும், அதன் நிறுவனங்கள் மீதும் நம்பிக்கையில்லை என்பது நிரூபணமாகியுள்ளது. நீதி, நிர்வாகம், அரசியலமைப்பு ஆகியவற்றுக்கும் மேலாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தன்னை நினைத்துக் கொள்கிறார்.
நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் துறைசார் சட்டப்பேரவைக் குழுக்கள் தொடர்பான துணைநிலை ஆளுநரின் அறிக்கை, கெளரவ ஆசிரியர்களை முறைப்படுத்துவது தொடர்பான மசோதா, தில்லி மெட்ரோ ரயில் கட்டண உயர்வு ஆகிய மூன்று முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. இந்த மூன்று விவகாரங்களையும் தில்லி அரசு அரசியலாக்கியது.
இதுபோல, தில்லி துணைநிலை ஆளுநர் அதிகாரம் குறித்து துணை முதல்வர் தெரிவித்துள்ள கருத்து ஏற்றுக் கொள்ள முடியாதது. தில்லி பிரதேசத்தின் தலைமை நிர்வாகியாக துணைநிலை ஆளுநர் உள்ளார். இவர் நேரடியாக சட்டப்பேரவைக்கு தகவல் அளிக்க உரிமை படைத்தவர். இது தொடர்பாக அரசியல் அமைப்புச் சட்டத்திலும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் கட்டண உயர்வு தொடர்பாக ஆராய சட்டப்பேரவையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் ஒரு பாஜக உறுப்பினர்கூட இடம் பெறவில்லை. இது அரசியல் சட்டத்தை மீறிய செயலாகும்.
கெளர ஆசிரியர்களை முறைப்படுத்தும் விவகாரம் தொடர்பாக அக்டோபர் 11-ஆம் தேதி வரை எவ்வித முடிவையும் எடுக்க வேண்டாம் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
தில்லி மெட்ரோ ரயில் கட்டண விவகாரத்தில் தில்லி அரசு தலையிடுகிறது. இதுபோன்ற நடவடிக்கை தில்லி மெட்ரோவுக்கும், தில்லி அரசுக்கும் இடையில் உள்ள ஒப்பந்தத்தை மீறுவது போலாகும் என்றார் அவர்.
பேட்டியின் போது, பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மன்ஜிந்தர் சிங் சிர்ஸா, ஜெகதீஷ் பிரதான் ஆகியோர் உடனிருந்தனர்.