மனைவியைக் கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து தில்லி காவல் துறையினர் கூறியதாவது:
புறநகர் தில்லி, பாபா ஹரிதாஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் சர்மா, இவரது மனைவி பாப்லி (42) . இரு குழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் இருவரும் அவர்களது தாத்தா -பாட்டி வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்த போது மனைவியைக் கொன்றுவிட்டதாகவும், பின்னர் தானும் விஷ மருந்தைக் குடித்துவிட்டதாகவும் சஞ்சய் சர்மா காவல் நிலையத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, போலீஸார் அவரது வீட்டுக்கு விரைந்து சென்றனர். வீட்டில் கதவு அருகே சர்மாவின் மனைவி கிடந்தார். உயிருக்கு போராடிய நிலையில் இருந்த சர்மாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் சிகிச்சையின் போது உயிரிழந்தார்.
கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறின் போது மனைவி பாப்லியை சர்மா கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு விஷ மருந்தைக் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பிரதேப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உண்மை தெரியவரும் என போலீஸார் கூறினர்.