முஸ்லிம்களின் வளர்ச்சியில் பாஜக மிகுந்த அக்கறை கொண்டுள்ளது; அவர்களது வாக்குகளுக்காக அல்ல' என்று பாஜக தேசிய துணைத் தலைவர் ஷியாம் ஜஜு கூறினார்.
பண்டிட் தீன தயாள் உபாத்யாய் நூற்றாண்டு பிறந்த தினத்தை ஒட்டி தில்லியில் பாஜக சிறுபான்மையின மோர்ச்சா சார்பில் சனிக்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பாஜக தேசியத் துணைத் தலைவரும், தில்லி பிரதேச பொறுப்பாளருமான ஷியாம் ஜாஜு பேசியதாவது:
நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களின் வளர்ச்சியில் பாஜக மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. அதேவேளையில், அவர்களது வாக்குகளைப் பெறும் நோக்கத்தில் அல்ல. ஏகாத்ம மானவ்வாத், அந்த்யோதயா போன்ற திட்டங்கள் இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரையும் வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும்.
நாட்டின் பிரிவினைக்குப் பிறகும் முஸ்லிம்கள் பாதுகாப்பாக உள்ளனர். இதற்கு காரணம் நாடு மீதான அவர்களது அன்புதான். இதனால், தேசத்தை விரும்புவதால் பாகிஸ்தானுக்கு அவர்கள் செல்லவில்லை என்று நாம் பாராட்ட வேண்டும்.
முஸ்லிம்கள் வாக்கு வங்கிகளாக பயன்படுத்தப்படுவதை பாஜக அரசு அனுமதிக்காது. அதேபோன்று வளர்ச்சியிலும் பின்தங்கிய நிலையில் இருக்கவும் விடாது.
முஸ்லிம்களின் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு தொடங்கியுள்ளது. பண்டிட் தீனதயாள் உபாத்யாய் தேசியவாதத்தால் கவரப்பட்டவர். நலிந்த பிரிவினரின் மேம்பாடுக்காக 'அந்த்யோதயா' யோசனையை முன்மொழிந்தவர்.
அவரது தத்துவமானது சமூக அரசியல் தத்துவம் மற்றும் முதலாளித்துவத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டது என்றார் ஷியாம் ஜாஜு.
இந்நிகழ்ச்சியில் அமைப்பின் பொதுச் செயலர் சித்தார்த்தன், மோர்ச்சா தலைவர் முகம்மது ஹாரூண், மோர்ச்சா பொறுப்பாளர் அதிஃப் ரஷீத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.