தில்லி போக்குவரத்து நிறுவனத்தின் (டிடிசி) பேருந்து பணிமனைகளில் "அமுல்' உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்கள் தங்களது தயாரிப்பு பொருள்களை விற்பனை செய்யும் வகையில் ஸ்டால்கள் அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தில்லி போக்குவரத்து நிறுவனம் அளித்திருந்த முன்மொழிவுக்கு மாநிலப் போக்குவரத்து ஆணையம் அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. டிடிசியின் வருவாயைப் பெருக்கும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அந்த அதிகாரி மேலும், கூறியதாவது: இதன்படி, டிடிசிக்கு சொந்தமான வளாகங்களில் அமுல் உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்களின் தயாரிப்புகளான பழச்சாறு, பால் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் விற்பனை செய்யப்படும். ஸ்டால்களை அமைத்துக் கொள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு வாடகை அடிப்படையில் இடம் ஒதுக்கீடு செய்யப்படும். மதர் டெய்ரிக்கு வழங்கப்பட்டுள்ளது போல விதிமுறைகள், நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படும். இந்த முடிவுக்கு டிடிசி போர்டும் ஒப்புதல் வழங்கியுள்ளது. அமுல் உள்ளிட்ட கூட்டுறவு சங்களுக்கு இடங்களை ஒதுக்குவதற்கு டிடிசியின் தலைமை மேலாண் இயக்குநருக்கு மாநிலப் போக்குவரத்து ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, தில்லி போக்குவரத்து நிறுவனத்துக்கு தில்லியில் உள்ள 40 பணிமனைகளில் இந்த ஸ்டால்கள் அமைக்கப்படும் என்றார் அந்த அதிகாரி.