திருநெல்வேலி வருவாய் மாவட்டத்தில் உள்ள 3 கல்வி மாவட்டங்களில் மீத்திறன் மாணவர்கள் 600 பேருக்கு உதவித்தொகை பெறுவதற்கான சிறப்புப் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மீத்திறன் பெற்ற மாணவர், மாணவிகளுக்கு அகில இந்திய உதவித்தொகை தேர்வு நடைபெறுகிறது. இத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. எனவே, இத் தேர்வை எளிதில் எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் சிறப்புப் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
திருநெல்வேலி கல்வி மாவட்டத்துக்கு கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சிறப்புப் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் பயிற்சியை தொடங்கிவைத்த மாவட்டக் கல்வி அலுவலர் ஜெயபாண்டி பேசியது:
ஊரகத் திறனாய்வு தேர்வு, தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகைத் திட்டம், தேசிய திறனாய்வுத் தேர்வு ஆகியவற்றில் மீத்திறன் மாணவர், மாணவிகளை பங்கேற்கச் செய்து வெற்றி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி, தென்காசி, சேரன்மகாதேவி என 3 கல்வி மாவட்டங்களில் தலா 2 மையங்களில் பயிற்சி வகுப்பு நடைபெறும். பள்ளி விடுமுறை நாள்களில் 40 நாள்களுக்கு இந்தச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். மாவட்டம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் இருந்து 600 மாணவர், மாணவிகள் பங்கேற்கின்றனர். அனுபவமிக்க ஆசிரியர்கள் பயிற்சி அளிக்கின்றனர். இந்த வாய்ப்பை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியில், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் தனசிங் ஐசக் மோசஸ், பள்ளித் தலைமையாசிரியர் ஆனந்த பைரவி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆவுடையப்ப குருக்கள், மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.