திருநெல்வேலி மாநகராட்சியில் வரி விதிக்கப்படாத கட்டடங்கள் குறித்து கள ஆய்வு நடத்தப்படவுள்ளதாக ஆணையர் சு. சிவசுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறியது: தச்சநல்லூர், பாளையங்கோட்டை, திருநெல்வேலி, மேலப்பாளையம் ஆகிய 4 மண்டலங்களுக்குள்பட்ட பகுதிகளில் ஏராளமான பழைய, புதிய கட்டடங்கள் அமைந்துள்ளன. இவற்றில், பல கட்டடங்கள் வரிவிதிக்குள்படுத்தப்படாமல் உள்ளதாக மாநகராட்சியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே, வரிவிதிப்புக்குள்படுத்தப்படாத பகுதிகளை கள ஆய்வு செய்து, விடுபட்ட கட்டடங்களுக்கு உரிய வரி விதிக்க தமிழக அரசின் முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, 4 மண்டலங்களிலும் கள ஆய்வு நடைபெறவுள்ளது. கட்டடங்களை அளவீடு செய்ய வருகை தரும் மாநகராட்சிப் பணியாளர்களுக்கு பொதுமக்களும், கட்டட உரிமையாளர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் ஆணையர்.