அரசுப் போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கான பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி, திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பொதுமேலாளர் அலுவலகம் முன் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் புதன்கிழமை தர்னா போராட்டம் நடைபெற்றது.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வரவு-செலவு பற்றாக்குறைக்கு தீர்வு காண வேண்டும். 13ஆவது ஊதிய பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களின் கோரிக்கைகள் முழுமையாக ஏற்கப்பட வேண்டும். ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். 1.4.2003-க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களையும் ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்க வேண்டும். கடந்த கால ஒப்பந்தங்களில் அரசு ஒப்புக்கொண்டவற்றை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஊதிய பேச்சுவார்த்தையில் அரசின் நிலைப்பாட்டை தொழிலாளர்களுக்கு விளக்கிக் கூறும் வகையிலும் இந்த தர்னா போராட்டம் நடைபெற்றது.
சிஐடியூ மாநிலக் குழு உறுப்பினர் பெருமாள் தலைமை வகித்தார். தொமுச மாநில அமைப்புச் செயலர் செயலர் ஏ. தர்மன், போராட்டத்தை தொடக்கி வைத்தார். அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் சம்மேளன (ஏஐடியூசி) துணைத் தலைவர் ஆர். ராதாகிருஷ்ணன், ஹெச்எம்எஸ் சம்மேளன துணைத் தலைவர் பி. சுப்பிரமணியன், பணியாளர் சம்மேளன துணைத் தலைவர் எஸ். சந்தானம் ஆகியோர் பேசினர்.
இந்தப் போராட்டத்தில், தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி, ஐஎன்டியூசி, ஹெச்எம்எஸ், எம்எல்எப், தேமுதிக, புதிய தமிழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், நாம் தமிழர் தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்ற போராட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள், ஓட்டுநர், நடத்துநர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.