டேராடூனிலுள்ள ராஷ்டிரிய இந்தியன் ராணுவக் கல்லூரியில் 2018-ஆம் கல்வியாண்டுக்கான 8-ம் வகுப்பில் சேர திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஜூலை 2018இல் தொடங்கும் வகுப்புகளுக்கு தகுதியான மாணவர்களை சேர்க்கும் வகையில் வரும் 2017 டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் தகுதித் தேர்வு நடைபெறுகிறது. இந்தக் கல்லூரியில் சேர விருப்பம் உள்ள மாணவர்கள் 7ஆம் வகுப்பு தேறிய அல்லது 7ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருப்பவராக இருக்க வேண்டும்.
1.7.2018 அன்று பதினொன்றரை வயது முதல் 13 வயதுடையவராக இருத்தல் வேண்டும். தகுதித் தேர்வு விண்ணப்பம் மற்றும் தகவல் தொகுப்பை பொதுப் பிரிவினர் துரித தபாலில் பெற ரூ. 600, பட்டியல் மற்றும் அட்டவணை இனத்தவர் துரித தபாலில் பெற ரூ. 555 கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை THE COMMANDANT என்ற பெயரில் டேராடூன் பாரத ஸ்டேட் வங்கியில் மாற்றத்தக்க வகையில் வரைவோலை (டிராப்ட்) எடுத்து அதனை கமாண்டன்ட், ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரி, டேராடூன் - 248 003, உத்தரகண்ட் என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் தமிழ்நாடு அரசுப் பணியாளார் தேர்வாணையம், சென்னை-3 என்ற முகவரிக்கு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். எழுத்துத் தேர்வு டிசம்பர் 1, 2, ஆகிய தேதிகளிலும், வாய்மொழித் தேர்வு வரும் ஏப்ரல் 5ஆம் தேதியும் நடைபெறும். டிசம்பர் 1ஆம் தேதி காலையில் ஆங்கிலத் தேர்வு, பிற்பகலில் கணக்குத் தேர்வு, டிச.2ஆம் தேதி காலையில் பொது அறிவுத் தேர்வு ஆகியவை நடைபெறும். மேலும் விவரங்களுக்கு, திருநெல்வேலி மாவட்ட முன்னாள் படைவீரர் நலஉதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ, 0462-2560440 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது www.rimc.org என்ற இணையதளத்திலோ தொடர்பு கொள்ளலாம் என்றார் ஆட்சியர்.