"விடுதலைப்புலிகள் மீதான தடைநீக்கம்: உலகத் தமிழர்களுக்கு கிடைத்த நீதியாகும்'
ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கி உத்தரவிட்டிருக்கிறது; இது உலகத் தமிழர்களுக்கு கிடைத்த நீதியாகும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியது: ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கி உத்தரவிட்டிருக்கிறது. இது உலக தமிழர்களுக்கு கிடைத்த நீதியாகும்.
இந்தியாவில் ஆட்சி செய்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அழுத்தம் காரணமாக இங்கிலாந்து அரசு விடுதலைப்புலிகள் மீது தடை விதித்தது. இதன்விளைவாக 28 நாடுகளை உறுப்பினராகக் கொண்ட ஐரோப்பிய யூனியனுக்கும் பரிந்துரைக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகளுக்கு ஐரோப்பிய யூனியனில் தடை நீடித்து வந்தது. ஆனால், இப்போதைய புதிய உத்தரவின் மூலம் மனித உரிமை ஆணையங்கள், ஐக்கிய நாடுகள் கவுன்சில் போன்றவற்றில் விடுதலைப் புலிகளுக்கு நீதி கேட்பதற்கான வாசல் திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவும் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்றார்.