பாளையங்கோட்டையில் கட்டடத் தொழிலாளி கொலை வழக்கில் இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
பாளையங்கோட்டை எம்.கே.பி. நகர் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் ராஜா என்ற ராஜலிங்கம் (24). கட்டடத் தொழிலாளி. இவர், தாவூத்நிஷா (24) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இத்தம்பதிக்கு அஜய் லிங்கம் (4) என்ற மகன் உள்ளான்.
இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு இரவு அப்பகுதியில் நண்பர்களுடன் ராஜா பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி விட்டனர்.
இச்சம்பவம் குறித்து மாநகர போலீஸார் வழக்குப் பதிந்து, கொலை செய்த மர்மநபர்களை தேடி வந்தனர். இதில், முன்விரோதம் காரணமாக, அப்பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் தரப்பினர் ராஜாவை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பாளையங்கோட்டை அருகேயுள்ள டக்கரம்மாள்புரம், முத்தமிழ் கார்டனைச் சேர்ந்த முத்து பாலவினீத் (18) என்பவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய சிலரை தேடி வருகின்றனர்.