புன்செய் நிலங்களை அரசு வழிகாட்டுதலை பின்பற்றி பத்திரம் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி மேலப்பாளையத்தில் வெள்ளிக்கிழமை சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 48 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அங்கீகாரம் இல்லாத புன்செய் மனை, மனைப்பிரிவுகளை பத்திரம் பதிவு செய்ய நீதிமன்றம் தடை விதித்தது. புன்செய் மனை, மனைப்பிரிவுகளை முறைப்படுத்திட அரசு புதிய வழிமுறைகளை அமல்படுத்த முடிவு செய்திருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து நீதிமன்றம் தடையை விலக்கிக் கொண்டது. எனினும் புதிய வழிகாட்டுதலின்படி சார்பதிவாளர் அலுவலகங்களில புன்செய் மனைகள் பத்திரம் பதிவு செய்யவில்லை.
அரசு கொண்டுவந்துள்ள புதிய வழிமுறையினை பின்பற்றி அங்கீகாரம் இல்லாத புன்செய் மனைகளை பத்திரம் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி சமூக நல ஆர்வலர்கள், நில உரிமையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் மேலப்பாளையத்தில் சார் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சார் பதிவாளர் அலுவலகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் துணைத் தலைவர் எம்.ஏ. நாகூர்கனி, மறுமலர்ச்சி தமுமுக மாநில பொதுச்செயலர் கே.எஸ். ரசூல்மைதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்டச் செயலர் பாட்டப்பத்து எம். முகம்மதுஅலி உள்ளிட்ட 48 பேரை போலீஸார் கைது செய்தனர்.