திருநெல்வேலி அருகேயுள்ள தாழையூத்தில் ஞாயிற்றுக்கிழமை பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
தாழையூத்து சர்க்கிள் ஆபீஸ் தெருவைச் சேர்ந்த பண்டாரம் மனைவி பூரணவள்ளி (50). இவர், தனது குடும்பத்தினருடன் தாழையூத்தில் உள்ள தேவாலயத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றாராம். அங்கு பிரார்த்தனைகள் முடிந்த பின் வீட்டுக்கு புறப்பட்டாராம். தாழையூத்து நான்குவழிச்சாலை பாலத்துக்கு கீழ் பகுதியில் நடந்து சென்றபோது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் பூரணவள்ளியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டார்.
பலத்த காயமடைந்த பூரணவள்ளியை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
தகவலறிந்ததும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.வே. அருண்சக்திகுமார், தாழையூத்து காவல் துணைக் கண்காணிப்பாளர் பொன்னரசு ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து தாழையூத்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.