பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சமூக ஆர்வலர் முகிலன் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
கூடங்குளத்தில் அணுஉலைக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களில் முகிலனும் ஒருவர். அதுமட்டுமின்றி, பல்வேறு பிரச்னைகளை முன்னிறுத்தி அவர் போராடி வருகிறார். இவர், கூடங்குளம் போராட்டம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அவர் சனிக்கிழமை காலை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
கூடங்குளம் அணுஉலைக்கு எதிராகப் போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக முடித்துவைக்க வேண்டும். தாமிரவருணி ஆற்றில் தண்ணீரை சுரண்டும் தனியார் குடிநீர் மற்றும் குளிர்பான நிறுவனங்களின் உரிமத்தை ரத்துசெய்ய வேண்டும். கொங்கராய குறிச்சி பகுதியில் தனியாருக்கு மணல் அள்ளும் உரிமையை வழங்கக் கூடாது என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, முகிலன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.