நெல்லை மாவட்டத்தில் பலத்த மழை

திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் புதன்கிழமை இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டித்தீர்த்தது.

திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் புதன்கிழமை இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் ஏராளமான மரங்கள் முறிந்ததோடு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
  தமிழகத்தில் அக்டோபர் இறுதி வாரத்தில் இருந்து வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கால்வரத்து, மானாவாரி குளங்களும், பிரதான அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தென்தமிழக கடலோர மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்டவற்றில் பலத்த மழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
   இந்நிலையில் புதன்கிழமை திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பகலில் வெயில் காணப்பட்டது. 
ஆனால், பிற்பகலுக்குப் பின்பு கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது. விக்கிரமசிங்கபுரம், பாபநாசம், சேரன்மகாதேவி, முக்கூடல்  உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகலுக்கு பின்பு பலத்த இடி-மின்னலுடன் மழை கொட்டித்தீர்த்தது. திருநெல்வேலி மாநகர பகுதிகளான மேலப்பாளையம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி சந்திப்பு, தச்சநல்லூர் ஆகிய பகுதிகளில் விட்டு விட்டு பலத்த மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
 சிந்துபூந்துறை, சேவியர்காலனி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியது. வெள்ளங்குளி அருகே பலத்த மழைக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் மரம் முறிந்து விழுந்ததால் அம்பாசமுத்திரம் திருநெல்வேலி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com