திருநெல்வேலி மாநகராட்சியில் 9 ஆவது வார்டு வண்ணார்பேட்டையில் எட்டுத்தொகை தெரு, சிந்தாமணி தெரு, பேராட்சி அம்மன் கோயில் தெரு, கம்பராமாயணத் தெரு, வளையாபதி தெரு, திருக்குறிப்புத் தொண்டர் தெரு உள்ளிட்ட தெருக்களில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறை குறித்து பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து தினமும் காலை 6 முதல் 7.30 மணி வரை சீராக குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். எனினும், மேற்கண்ட பகுதியில் ஒரு நாளுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், குடிநீர் மாசு கலந்து நிறம் மாறி காணப்படுவதால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனிடையே, புதன்கிழமை காலையில் குறைந்த நேரம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதாம். இதனைக் கண்டித்து பொதுமக்கள் அப்பகுதியில் தெருக்களில் கருப்புக் கொடி ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த போலீஸார் உடனடியாக கருப்புக் கொடியை அகற்றினர். அத்தெருக்களில் மாநகராட்சி அதிகாரிகள் முகாமிட்டு குடிநீரை ஆய்வு செய்தனர்.