தேன்பொத்தை கூட்டுறவு கடன் சங்கத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு கடனுதவி வழங்குதல் மற்றும் சிறப்பு உறுப்பினர் கல்வித்திட்டம் ஆகியவை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் சி. குருமூர்த்தி பேசுகையில் தெரிவித்ததாவது:
தேன்பொத்தை கூட்டுறவு கடன் சங்கம் 1953 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. பெரியபிள்ளைவலசை, வல்லம், பிரானூர், சுமைதீர்ந்தபுரம், அய்யாபுரம், அழகப்பபுரம் கிராமங்களைச் சேர்ந்த 1090 உறுப்பினர்கள் உள்ளனர்.
இச்சங்கத்தின் மூலம் உழவர் காசுக்கடன், கூட்டுப்பொறுப்பு குழுக் கடன், விவசாய நகைக்கடன், நகைக்கடன், மத்திய கால கடன், சுய உதவிக் குழு கடன் உள்ளிட்டவை உள்பட ரூ. 9.52 கோடிக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகள் 17 பேருக்கு பெட்டிக்கடை, தேங்காய் வியாபாரம் உள்ளிட்ட தொழில்கள் செய்ய ரூ. 23 லட்சத்து 40 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
நிகழ்ச்சியில், சங்கச்செயலர் க. அருணாசலம் வரவேற்றார். முதன்மை வருவாய் அலுவலர் த. தொண்டிராஜ் முன்னிலை வகித்தார். சங்கத் தலைவர் கே.எம். குத்தாலிங்கம், துணைத் தலைவர் ம. சங்கரன், கூட்டுறவு சார்பதிவாளர்கள் லட்சுமணன், ஜான் கபிரியல், தென்காசி கள மேலாளர் திரவியக்குமார், பண்பொழி கூட்டுறவுச் சங்கச் செயலர் பரமசிவம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இத்தகவலை திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குநர் ரா. செல்வகணேஷ் தெரிவித்தார்.