திருநெல்வேலி அருகேயுள்ள கங்கைகொண்டானில் ஆடுமேய்க்கும் தொழிலாளி மர்ம நபர்களால் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
கங்கைகொண்டான் ஆனந்தவள்ளி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் பேச்சிமுத்து என்ற துரைப்பாண்டி (53). ஆடுமேய்க்கும் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவர், வீட்டில் செவ்வாய்க்கிழமை மதியம் தூங்கிக் கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் பேச்சிமுத்துவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.தகவலறிந்ததும் கங்கைகொண்டான் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
2010ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஒரு கொலை வழக்கு தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் துரைப்பாண்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறுது. இவ்வழக்கு தொடர்பாக கங்கைகொண்டானைச் சேர்ந்த உய்க்காட்டான் மகன் துரை (23) என்பவரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.