திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினரிடம் சிக்கிய ரூ.3.59 லட்சம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் இடைத்தரகர்கள் மூலம் அதிகாரிகள் பணம் பெறுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து சோதனை நடத்த அறிவுறுத்தப்பட்டது. அதன்படி திருநெல்வேலி என்.ஜி.ஓ. பி காலனியில் உள்ள திருநெல்வேலி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையின் துணை கண்காணிப்பாளர் மதியழகன் தலைமையிலான குழுவினர் புதன்கிழமை சோதனை செய்தனர்.
வியாழக்கிழமை அதிகாலை வரை சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை தொடர்ந்தது.
இந்தச் சோதனையின்போது ரூ.3 லட்சத்து 59 ஆயிரம் தொகைக்கு உரிய ஆவணங்கள் முறையாக இல்லையெனக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சென்னையில் உள்ள உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.