மாணவர்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பு ஆசிரியர்களுக்கே அதிகம்: உளவியல் வல்லுநர்
இப்போதைய சமூக கட்டமைப்பில் மாணவர்களை நல்வழிபடுத்துவதில் பெற்றோர்களைவிட ஆசிரியர்களுக்கே பொறுப்பு அதிகம் என உளவியல் வல்லுநர் அந்தோனி நேவிஸ் அமர்நாத் தெரிவித்தார்.
தேசத்தை கட்டமைப்பதற்கான மனிதவியல் கற்பித்தல் முறைகள் எனும் தலைப்பில் பாளையங்கோட்டை தூய இஞ்ஞாசியார் கல்வியியல் கல்லூரியில் ஒருநாள் சர்வதேச பயிலரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் நிர்மலா தேவி தொடங்கிவைத்தார். கல்லூரிச் செயலர் மேக்தலின் தெரஸ், கலைமனைகளின் அதிபர் தாமஸ் அலெக்சாண்டர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
இக் கருத்தரங்கில் ஆசிரியர் பயிற்சி பெறும் மாணவர், மாணவிகளுக்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த உளவியல் அறிவுரை பகர்தல் கூட்டமைப்பின் வல்லுநர் அந்தோனி நேவிஸ் அமர்நாத், ஆலோசனைகளை வழங்கிப் பேசியது:
இன்றைய சமூக கட்டமைப்பில் பிறக்கும் குழந்தையானது தனது 6 வயதில் உள் வாங்கிக் கொள்ளும் வழிமுறைகளையே ஆயுள் வரைக்கும் கடைப்பிடிக்கும் தன்மையாக அமைந்துள்ளது. குறிப்பாக, இளம்வயதில் பெற்றோரின் அரவணைப்பை இழக்க நேரிடும் குழந்தைகள் பாதுகாப்பற்ற மற்றும் பொறுப்பற்ற மனநிலையிலேயே வளரும் தன்மையில் உள்ளன. மனித மனம் மூன்று நிலைகளுக்கு ஏப்போதும் ஏக்கம் கொண்டவை. ஒன்று அன்புக்காக ஏங்கும்; மற்றொன்று எதிர்கால லட்சியத்துக்கானது; மூன்றாவது தன்னை உணர்ந்து சுய ஆற்றலை வளர்த்துக் கொள்ளுதல். இந்த மூன்றையும் கிடைக்கச் செய்தால் மட்டுமே ஒரு குழந்தை சமூகத்தில் பொறுப்புள்ள குடிமகனாக வளரத் தொடங்கும். இல்லையெனில் தவறான பாதைக்கு செல்ல நேரிடும்.
எனவே, மாணவர்களை நல்வழிப்படுத்துவதில் பெற்றோர்களைவிட ஆசிரியர்களுக்கே அதிக பொறுப்பும், கடமையும் உள்ளது. தொடக்கக் கல்வியில் பயிலும் குழந்தைகளை அவரவர் வயதின் தன்மைக்கேற்ப வளரவிட வேண்டும். தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் குழந்தைகளின் உளவியல்ரீதியாக அணுகி அதற்கேற்ப நடந்து கொள்ளுதல் வேண்டும் என்றார் அவர்.
இந்தப் பயிலரங்கில், பல்வேறு கல்வியியல் கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். அனைவருக்கும் பயிற்சி சான்றிதழ்களை தூய சவேரியார் கல்லூரி முதல்வர் பிரிட்டோ வின்சென்ட் வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை, தூய இஞ்ஞாசியார் கல்லூரி ஆசிரியர்கள், மாணவிகள் செய்திருந்தனர்.