பாளையங்கோட்டையில் இருந்து கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக வாகன ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.
பாளையங்கோட்டையில் சிலர் வீடு வீடாகச் சென்று ரேஷன் அரிசியைக் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து கேரளத்துக்கு கடத்துவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருநெல்வேலி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருப்பதி, உதவி ஆய்வாளர்
இளஞ்செழியன் மற்றும் போலீஸார் பாளை. மார்க்கெட் பகுதியில் வெள்ளிக்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் வாகனங்களை சோதனையிட்டனர்.
அப்போது, பாளை. கோட்டூர் சாலையிலிருந்து பிரதான சாலை வழியாக வந்த ஆம்னி வேனில் சிறிய சாக்கு மூட்டைகளில் ரேஷன் அரிசியை கட்டி பேட்டைக்கு கொண்டு சென்று அங்கிருந்து கேரளத்துக்கு கடத்த இருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து ஆம்னி வேனில் இருந்த 750 கிலோ அரிசியை போலீஸார் பறிமுதல் செய்தனர். வேனும் பறிமுதல் செய்யப்பட்டது. வேன் ஓட்டுநர் ஆறுமுகம் (32) என்பவரை கைது செய்த போலீஸார் அரிசி கடத்தலில் தொடர்பு உள்ளவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.