சமூக நல்லிணக்க நாள் விழாவில் பயனாளிகளுக்கு ரூ.80 லட்சம் நலத்திட்ட உதவிகள்
பாளையங்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற அம்பேத்கரின் 127ஆவது பிறந்த நாள் மற்றும் சமூக நல்லிணக்க நாள் விழாவில் 58 பயனாளிகளுக்கு ரூ.80 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.
விழாவில் ஆட்சியர் பேசியதாவது: அம்பேத்கர் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் பாடுபட்டவர். மனித உரிமைகள், பெண் உரிமைகள், பெண்களுக்கான சொத்து உரிமைகள் போன்ற பல்வேறு சட்ட முன்வடிவுகளை இயற்றியவர். அதனால்தான், அம்பேத்கரின் பிறந்த நாள் நாடு முழுவதும் சமூக நல்லிணக்க நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இப்போது முதல் மே 5ஆம் தேதி வரை 15 நாள்களுக்கு கிராம சுயாட்சி இயக்கத்தின் சார்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் 29 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, 15 நாள்களில் அரசின் முக்கிய திட்டங்கள் தன்னிறைவு அடையும் சிறப்பு முயற்சியாக மேற்கொள்ளப்படுகிறது. அக்கிராமங்களில் 100 சதவீதம் மின் வசதி செய்தல், அனைத்து வீடுகளுக்கும் எல்ஈடி விளக்குகள் வழங்குதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். இரண்டு வயதிற்குள்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களில் தடுப்பூசி போடாதவர்களைக் கண்டறிந்து அங்கன்வாடி பணியாளர்களுடன் இணைந்து தடுப்பூசி போடும் பணிகளை சுகாதாரத் துறையினர் மேற்கொள்வார்கள். தூய்மை பாரத இயக்கம், இல்லக் கழிப்பறை உபயோகித்தல் உள்ளிட்ட அனைத்து விதமான அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என்றார்.
விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி, மாவட்ட வழங்கல் அலுவலர் புண்ணியகோட்டி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் விஜயகுமார், மாவட்ட சமூக நல அலுவலர் இந்திரா, மாவட்ட தாட்கோ மேலாளர் மாரிமுத்து, மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் கஜேந்திரநாதன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செந்தில்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலக கண்காணிப்பாளர் பெனிட் ஆசிர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.