களக்காடு அருகே ஆடுமேய்க்கும் தொழிலாளி கொலை

களக்காடு அருகே விவசாயத் தோட்டத்தில் ஆடு மேய்க்கும் தொழிலாளி வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார்.

களக்காடு அருகே விவசாயத் தோட்டத்தில் ஆடு மேய்க்கும் தொழிலாளி வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
களக்காடு அருகேயுள்ள கீழகள்ளிகுளத்தைச் சேர்ந்தவர் அ. முத்து (55).  இவருக்கு மனைவி உலகம்மாள் (48),  மகன்கள் சுடலை (27), இசக்கிதாஸ் (25) ஆகியோர் உள்ளனர்.  முத்து தனக்குச் சொந்தமான 300-க்கும் மேற்பட்ட ஆடுகளை தனது மூத்த மகன் சுடலை உதவியுடன் அப்பகுதியில் உள்ள விவசாயத் தோட்டங்களில் கிடை அமைத்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் ஜீவனம் நடத்தி வந்தார். இந்நிலையில், கீழகள்ளிகுளத்தைச் சேர்ந்த பழனி என்பவரது விவசாயத் தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைத்த முத்து, சனிக்கிழமை இரவு ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு அப்பகுதியில் தூங்கச் சென்றாராம். ஞாயிற்றுக்கிழமை காலை சுடலை தனது தந்தைக்கு உணவு எடுத்துக் கொண்டு ஆட்டுக்கிடை அமைத்திருந்த தோட்டத்துக்குச் சென்றாராம்.  அப்போது அங்கு முத்து வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தாராம். நான்குனேரி காவல் உதவிக் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன், களக்காடு காவல்ஆய்வாளர் சபாபதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று,  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து குடும்பத்தினர், கிராம மக்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். முன்விரோதம் காரணமாக இக்கொலை நடந்ததா அல்லது ஆடுகளை திருட வந்த நபர்கள் இக்கொலையை செய்தனரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com