திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், பாளையங்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த 25 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, தென்காசி வட்டத்தைச் சேர்ந்த 5 நரிக்குறவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.
சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், சங்கரன்கோவில் வட்டத்தைச் சேர்ந்த 2 பேருக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை பெறுவதற்கான ஆணை, நான்குனேரி வட்டத்தைச் சேர்ந்த விதவை ஒருவருக்கு மாதம் ரூ.1000 பெறுவதற்கான ஆணையும் வழங்கப்பட்டது. தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் மூலம் மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களுக்கென்று மாவட்டத்தில் 15 இடங்களில் சிறப்பு பயிற்சி மையங்கள் இயங்கி வருகின்றன. இச்சிறப்பு பயிற்சி மையங்களுக்கு மத்திய அரசின் நிதியுதவி மூலம் தேவையான தளவாட சாமான்கள் சேர், டேபிள் மற்றும் எடை பார்க்கும் இயந்திரம் போன்ற சாதனங்களை ஆட்சியர் வழங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் பூ. முத்துராமலிங்கம், மாவட்ட வழங்கல் அலுவலர் புண்ணியக்கோட்டி, உதவி ஆணையர் (கலால்) வி. பழனிக்குமார், துணை ஆட்சியர்கள் (பயிற்சி) மயில், லெட்சுமி பிரியா, தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குநர் சந்திரகுமார், திட்ட மேலாளர் விஸ்வநாதன், களப்பணியாளர்கள் ரவீந்திரன், ஏ. ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.