தனியார் மருத்துவமனையில் மருத்துவர்கள் அலட்சியமாக செயல்படுவதாக, ஆட்சியரிடம் பெண் திங்கள்கிழமை மனு அளித்தார்.
திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. பல்வேறு அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை கோரி பொதுமக்கள் மனு அளித்தனர். அப்போது, திருநெல்வேலி நகரம் தையல்காரத் தெருவைச் சேர்ந்த எம். மகாராணி அளித்த மனு:
எனது கணவர் மாரிமுத்து ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். எங்களின் மகள் அன்னி ஷெக்கினாவுக்கு (11 மாதம்) காய்ச்சல் ஏற்பட்டதால், கடந்த 11 ஆம் தேதி அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு அலட்சியமாக சிகிச்சை அளித்ததோடு, இறுதிகட்டத்தில் வேறு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அறிவுறுத்திவிட்டனர். அதன்பிறகு தீவிரச் சிகிச்சை கிடைக்கும் முன்பே குழந்தை இறந்துவிட்டது. தொடக்க நிலையில் எவ்வித பரிசோதனையும் செய்யாமல், தவறான சிகிச்சை அளித்து எங்களது குழந்தையின் உடல்நிலையை மோசமாக்கி உயிரிழப்புக்கு காரணமான தனியார் மருத்துவமனை மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.