திருநெல்வேலி மாவட்டத்தில் மாணவர்களுக்கு வங்கிகளிலிருந்து கடன் வழங்கும் முகாம் சனிக்கிழமை (பிப். 17) நடைபெறுகிறது.
இதுகுறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ். முருகானந்தம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2016-17ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்- மாணவிகள் உயர்கல்வியைத் தொடர்ந்த நிலையில், கல்விக் கடன் பெற வங்கிகளில் விண்ணப்பித்து கடன் கிடைக்காதோருக்கான சிறப்பு கல்விக் கடன் முகாம் சனிக்கிழமை காலை 10 மணிக்கு வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெறும் முகாமில், அனைத்து வங்கி மேலாளர்கள், கல்லூரிக் கல்வி இணை இயக்குநர், மாவட்டக் கல்வி அலுவலர்கள் பங்கேற்கின்றனர். இதில், மாணவர்கள் பங்கேற்று கல்விக்கடன் குறித்த முழு விவரங்களை அறிந்துகொண்டு பயனடையலாம் என்றார் அவர்.