சுரண்டை அருகே மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிளஸ் 2 மாணவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சுரண்டை அருகேயுள்ள தாயார்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குட்டி மகன் ராமகிருஷ்ணன்(17). இவர் பங்களாச்சுரண்டையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 8ஆம் தேதி மாலையில் காய்ச்சல் கூடியதால் இவருக்கு வலிப்பு ஏற்பட்டதாம். உடனடியாக அவரை சுரண்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குறையாததால் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
தாயார்தோப்பு கிராமத்தில் பரவலாக மர்மக் காய்ச்சல் காரணமாக பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, சுகாதாரத் துறை அதிகாரிகள் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு முகாம் அமைக்கவும், நோய்த் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளவும் வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.