திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை அதிகாரிகள் திடீரென மேற்கொண்ட சோதனையில் அனுமதியில்லாத வழித்தடத்தில் இயக்கப்பட்டதாக 5 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதித்தனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை, பெங்களுரூ போன்ற தொலை தூரங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் பயணிகளிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.
இதைத் தொடர்ந்து திருநெல்வேலி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெ. சசி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் இ. நாகூர்கனி, செங்குட்டுவேல், சரவணன் மற்றும் மாநகர போக்குவரத்துக் காவலர்கள் வெள்ளிக்கிழமை இரவு சந்திப்பு பேருந்து நிலையத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
சென்னை, கோவை, பெங்களுரூ, திருச்சி போன்ற தொலைதூரங்களுக்கு இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளில் பயணிகளிடம் விசாரணை நடத்தியதுடன், பேருந்துகளின் உரிமங்களுக்கான ஆவணங்களைஆய்வு செய்தனர். இதில், 5 ஆம்னி பேருந்துகள் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தை தவிர்த்து பிற வழித்தடங்களில் இயக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பேருந்துகளுக்கு தலா ரூ. 2,500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.