நான்காவது கட்டமாக தாமிரவருணியை தூய்மைப்படுத்தும் பணியில் 15 ஆயிரம் பேர் ஈடுபடவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், ஆட்சியர் பேசியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரவருணி ஆற்றங்கரை பகுதிகளில் ஏற்கெனவே மூன்று கட்டங்களாக கல்லூரி மாணவ, மாணவிகள், தொண்டு நிறுவனங்கள் என பல்வேறு அமைப்புகளின் பங்களிப்புடன் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நான்காம் கட்டமாக தாமிரவருணி கரைப் பகுதியில் இரண்டு நாள்கள் தூய்மைப் பணி நடைபெறவுள்ளது. முதல் நாளில் சீமைக்கருவேல மரங்கள், புதர்கள், ஆக்கிரமிப்புகள் பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றப்படும். தாமிரவருணி கரையை 144-க்கும் மேற்பட்ட பகுதிகளாக பிரித்து தூய்மை பணிகள் நடைபெறும். இப்பணியில் கல்லூரி மாணவ, மாணவிகள், உள்ளாட்சி அலுவலர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர், தொண்டு அமைப்பினர் என 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபடவுள்ளனர் என்றார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், உதவி ஆட்சியர் (பயிற்சி) சுக்ஹபுத்ரா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார், திருநெல்வேலி கோட்டாட்சியர் மைதிலி, அண்ணா பல்கலைக்கழக முதல்வர் சத்யநாதன், மகளிர் திட்டம், திட்ட இயக்குநர் அந்தோணி பெர்னாண்டோ, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமுர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.