தருவை எப்.எக்ஸ். பாலிடெக்னிக் கல்லூரியில் சாரணர் இயக்க ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் ஒரு வாரம் நடைபெற்றது.
இம்முகாமில், கல்லூரி சாரண, சாரணிய இயக்கத்தைச் சேர்ந்த 19 மாணவர்கள், 4 விரிவுரையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமை கல்லூரி முதல்வர் டி.பி. ரூபஸ் தொடங்கிவைத்தார். துணை முதல்வர் எம். மைக்கேல் பொன்ராஜ் முன்னிலை வகித்தார். சாரணர் இயக்க திருநெல்வேலி கல்வி மாவட்ட துணை தலைமை பயிற்சியாளர் டி. அதிர்ஷ்டராஜ் குமரப்பன், மதுரை வடக்கு கல்வி மாவட்ட தலைமை பயிற்சியாளர் எபனேசர் சந்திரஹாசன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
அவசர காலங்களில் உடைமைகளைப் பாதுகாக்கும் நுட்பங்கள், தனி மனித ஒழுக்கம் கடைப்பிடித்தல், தாற்காலிக குடிசை அமைத்தல், ஆபத்துக் காலங்களில் தூக்குப் படுக்கை தயாரித்தல், குடில் அமைத்தல், அவசர கால முடிச்சு போடுதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
முகாமின் ஒரு பகுதியாக நடைப்பயணம் மூலம் இயற்கை வளங்கள், சிற்பங்களை பார்வையிடும் வகையில் கிருஷ்ணாபுரம், ஆதிச்சநல்லூர் ஆகிய இடங்களுக்கு சென்று வரப்பட்டது.
முகாம் நிறைவு நாளில் நடைபெற்ற சர்வ சமய வழிபாடு நிகழ்ச்சிக்கு முதல்வர் தலைமை வகித்தார். தூத்துக்குடி சக்தி வித்யாலயா நிறுவனர் சண்முகம் பங்கேற்று பயிற்சி பெற்றவர்களுக்கு சான்று வழங்கினார். விரிவுரையாளர் செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.