திருநெல்வேலி மாவட்டத்தில் 2018-19ஆம் ஆண்டுக்கான வளம்சார் கடன்திட்ட அறிக்கை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இதன்படி ரூ.8 ஆயிரத்து 645 கோடியே 22 லட்சம் முன்னுரிமை வங்கிக் கடனுதவிகள் வழங்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வளம்சார் கடன்திட்ட அறிக்கையை வெளியிட்டு ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியது: இம் மாவட்டத்துக்கு 2018-19ஆம் ஆண்டில் முன்னுரிமை கடனாக ரூ. 8 ஆயிரத்து 645 கோடியே 22 லட்சம் கொடுப்பதற்கு வாய்ப்பு உள்ளது. 2018-19ஆண்டில் பயிர்க் கடன்களுக்கு ரூ. 4 ஆயிரத்து 287 கோடியும், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த மற்ற தொழில்களுக்கு முதலீட்டு கடனாக ரூ. 1,643 கோடியும், குறு மற்றும் சிறு தொழில்களுக்கு ரூ.558 கோடியும், இதர முன்னுரிமை கடன்களுக்கு ரூ. 2 ஆயிரத்து 157 கோடியும் தர வாய்ப்புகள் இருப்பதாக அது தெரிவிக்கிறது.
இந்த ஆய்வுதிட்ட அறிக்கை மாவட்டத்தின் வளத்தை முன்னிறுத்தி தயாரிக்கப்படுகிறது. திட்ட மதிப்பிட்டில் கூறப்பட்டுள்ளபடி கல்வி மற்றும் சுயஉதவிக் கடன்கள் அதிகமாக வழங்க வங்கியாளர்கள் முயற்சிக்க வேண்டும் என்றார் அவர்.
நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் எஃப்.சலீமா பேசியது: இம் மாவட்டத்தின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள், விரிவாக்க சேவை மையங்களின் செயல்பாடு, தொழில்நுட்ப மாற்றம், வங்கிகளின் நிதி ஆதாரம் ஆகியவற்றை ஆதாரமாக கொண்டு வளம்சார் கடன் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி நிகழாண்டில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த மற்ற தொழில்களில் முதலீட்டை அதிகப்படுத்தும் வகையில் முன்னுரிமை கடன்கள் வழங்க வங்கிகள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
திட்டத்தின் முதல் பிரதியை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல மேலாளர் ராஜ்குமார் பெற்றுக்கொண்டார். முன்னோடி வங்கி மேலாளர் என்.கஜேந்திரநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.