தமிழகத்தில் திமுக -காங்கிரஸ் கூட்டணி தொடரும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகேயுள்ள வடகரை இசக்கியம்மன் சமேத உடையார் சாஸ்தா கோயில் கும்பாபிஷேக விழாவில் புதன்கிழமை பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தமிழகத்தில் முதல்வர் கனவுடன் 10 பேர் களத்தில் உள்ளனர். தமிழகத்தில் தற்போது அதிமுக தொண்டர்கள், மக்களின் ஆதரவு இல்லாத, மத்திய அரசின் பினாமி ஆட்சி நடைபெறுகிறது.
ரஜினி, கமல் போல டி.டி.வி. தினகரனும் புதிய கட்சியைத் தொடங்குகிறார். அவருக்கு எனது வாழ்த்துகள். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்.
18 பேரவை உறுப்பினர்கள் குறித்த பிரச்னையில் நீதிமன்றத் தீர்ப்பு வெளியானதும் இந்த ஆட்சி தானாகவே கலைந்துவிடும். விரைவில் தேர்தல் நடைபெறும். தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும். தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைப்பதே காங்கிரஸின் நோக்கம். எங்களது நோக்கம் நிறைவேறும் என்றார் அவர்.