தாமிரவருணி மகா புஷ்கர விழாவையொட்டி, திருநெல்வேலி அருகன்குளம் எட்டெழுத்துப் பெருமாள் கோயில் ஜடாயு படித்துறையில் சனிக்கிழமை நடைபெற்ற மங்கள ஆரத்தி வைபவத்தில் ஜீயர்கள் கலந்துகொண்டனர்.
தாமிரவருணி நதிக்கரையில் பாபநாசத்தில் தொடங்கி புன்னக்காயல் வரை 143 தீர்த்தக்கட்டங்களில் தாமிரவருணி மகா புஷ்கரம் கடந்த 11ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
மகா புஷ்கர விழாவையொட்டி நதியில் பொதுமக்களும், பக்தர்களும் புனித நீராடுதல், மாலையில் மங்கள ஆரத்தி வைபவம் ஆகியவை நடைபெற்று வருகின்றன. சனிக்கிழமை திருநெல்வேலி அருகே அருகன்குளம் எட்டெழுத்துப் பெருமாள் ஜடாயு படித்துறை தீர்த்தக்கட்டத்தில் மங்கள ஆரத்தி வைபவம் நடைபெற்றது.
முன்னதாக புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி கோயிலிலிருந்து ஸ்ரீஎட்டெழுத்துப் பெருமாள், காட்டுராமர் உற்சவத்தில் எழுந்தருளினர். எட்டெழுத்து பெருமாள், காட்டுராமர் ஜடாயு படித்துறை தீர்த்தக்கட்டத்துக்கு வந்ததும் தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து திருக்குறுங்குடி ஸ்ரீவானமாமலை ராமானுஜ ஜீயர் சுவாமிகள், மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் சுவாமிகள், கொங்கு மண்டல நாராயணர் ஜீயர் சுவாமிகள் ஆகியோர் படித்துறையில் இருந்தவாறு நதியில் தீர்த்தம் சமர்ப்பித்தனர். இதையடுத்து காசி வேத விற்பன்னர்கள் மங்கள ஆரத்தி எடுக்கும் வைபவம் நடைபெற்றது.
இதில், அனந்த பத்மநாபசுவாமிகள், தாமிரவருணி புஷ்கர விழா ஒருங்கிணைப்பாளர் சுவாமி பக்தானந்தா மகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மகா புஷ்கரத்தையொட்டி கோசாலையில் ஹோமம், உயன்யாசம் ஆகியவை நடைபெற்றன.