நெல்லை குறுக்குத்துறையில் ஆரத்தி வழிபாடு
தாமிரவருணி மஹா புஷ்கர விழாவையொட்டி திருநெல்வேலி குறுக்குத்துறையில் மஹா ஆரத்தி வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தாமிரவருணி மஹா புஷ்கர ஒருங்கிணைப்புக்குழு சார்பில் குறுக்குத்துறையில் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை மாலையில் யாகசாலை கூடத்தில் சிறப்பு தீபாராதனைக்கு பின்பு புனித நீர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த மேடையில் தாமிரவருணி அன்னைக்கு அலங்கார ஆரத்தி பூஜை நடைபெற்றது. வேத மந்திரங்களுடன் மலர்களை நதியில் தூவி வழிபாடு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில், முன்னாள் தலைமை செயலர் ஸ்ரீதர், கூட்டுறவுத்துறை ஆணையர் ராஜேந்திரன், திருநெல்வேலி கோட்டாட்சியர் மணீஸ், தாமிரவருணி மஹா புஷ்கர விழா ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள் எஸ்.மகாலட்சுமி சுப்ரமணியன், வளசை கே.ஜெயராமன், கடலூர் ஸ்ரீகோபி பாகவதர், சி.பழனிசெல்வம், ஆர்.கே.நரேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
"தாமிரவருணி சிறப்புகள்' என்ற தலைப்பில் பேசிய மாணவி தேஜஸ்வதி பாராட்டப்பட்டார். ஆரத்தி நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.