திசையன்விளையில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை, ரூ. 40 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
திசையன்விளை இட்டமொழி சாலையில் வசிப்பவர் கொம்பையா மனைவி முத்தம்மாள் (65). இதில், கொம்பையா சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மகன் அண்ணாமலை குமார் வெளிநாட்டில் உள்ளார். மகள் சுமதி திருமணமாகி கோயம்புத்தூரில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், முத்தம்மாள் கடந்த 20 நாள்களுக்கு முன்பு மகள் சுமதி வீட்டிற்கு சென்றுவிட்டாராம். இதனிடையே, வீட்டின் பூட்டு உடைந்துகிடப்பதை செவ்வாய்க்கிழமை மாலை பார்த்த எதிர்வீட்டுப் பெண், சம்பவம் குறித்து முத்தம்மாளுக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தார்.
அவர்கள் வந்து பார்த்ததில், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 15 பவுன் நகை, ரூ. 40 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.