தமிழக அரசின் தொழிலாளர் துறை சார்பில் தொழில் நல்லுறவு விருது வழங்கப்படவுள்ளதால், அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடர்பாக திருநெல்வேலி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முகமது அப்துல்காதர் சுபைர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அமைதியும், நல்ல தொழில் உறவு நிலவுவதையும் ஊக்குவிக்கும் பொருட்டு தமிழக அரசு தொழில் நல்லுறவு விருதை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி, நல்ல தொழில் உறவைப் பேணிப் பாதுகாக்கும் வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு 2017ஆம் ஆண்டுக்கான விருதை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட முத்தரப்புக் குழு தேர்ந்தெடுக்கும்.
இந்த விருதுக்குரிய விண்ணப்பங்களை தொழிலாளர் துறையின் இணையதளத்திலிருந்து (http://www.labour.tn.gov.in/labour) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இதேபோல் அந்தந்த மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம், தொழிலாளர் துணை ஆணையர் (சமரசம்) அலுவலகம், வட்டார தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடனும், விண்ணப்ப கட்டணம் செலுத்திய விவரத்தையும் இணைத்து, சென்னை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்துக்கு அக். 10ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.