மணப்பாறை அருகே புதன்கிழமை இருசக்கர வாகனம் மீது 108 ஆம்புலன்ஸ் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
மணப்பாறை அடுத்த எஃப்.கீழையூர், பெரியகாளப்பட்டியைச் சேர்ந்தவர் முருகன் மகன் ஹரிராமகிருஷ்ணன் (23). இவர் புதன்கிழமை பிறந்தநாளை கொண்டாட கேக் வாங்குவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் தனது நண்பர் தாஸ் என்ற சின்னப்பன் மகன் சண்முகநாதனுடன் (18) மணப்பாறை நோக்கி வந்து கொண்டிருந்தார். உசிலை ஊரணி அருகே வந்தபோது எதிரே வந்த ஆம்புலன்ஸ் வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஹரிராமகிருஷ்ணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். சண்முகநாதன் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விபத்தை கண்ட அப்பகுதியினர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முசிறியை சேர்ந்த முத்துசாமி மகன் லோகேஷ் (32) மற்றும் தொழில்நுட்ப அலுவலர் ராதாவை தாக்க முயன்றதால் அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி காவல் நிலையம் சென்றனர். இதையடுத்து மணப்பாறை போலீஸார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் லோகேஷை கைது செய்தனர். பிறந்தநாளிலேயே ஹரிராமகிருஷ்ணன் உயிரிழந்தது பெரியகாளப்பட்டி கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.