திருச்சி திருவானைக்கா பகுதியில் அரசுப் பேருந்து மோதியதில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வெள்ளிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம், லால்குடி அரியூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தானம் மகன் பழனி (52). திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். திருச்சி சிந்தாமணி காவலர் குடியிருப்பில் தங்கியுள்ள இவருக்கு மனைவி, மகள் உள்ளனர்.
கடந்த சில நாள்களாக விடுப்பில் இருந்த பழனி, வெள்ளிக்கிழமை இரவு லால்குடி செல்வதற்காக தனது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் திருவானைக்கா பகுதியில் உள்ள திரையரங்கு அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கல்லணையிலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் சென்ற அரசுப் பேருந்து பழனி சென்ற வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பழனி அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார். அவரது உறவினர் லேசான காயங்களுடன் தப்பினார். விபத்து குறித்து திருச்சி மாநகர வடக்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.